மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன.

மாற்றுத்திறனாளிகள் கடந்த காலம் முதல் தற்போது வரை கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் என பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாமல் மனதில் உறுதிகொண்டு போராடினால் உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார். அதையடுத்து மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் பேசியது: இந்த அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை 78 இலவச மருத்துவ முகாம்கள், 28 பொதுசுகாதாரம் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தசோகை, கொழுப்பு, புரதச் சத்து குறைபாடுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் நலனுக்காக அரசின் ஒத்துழைப்போடு மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

அதையடுத்து ஊட்டச் சத்துகளின் அவசியம், பொது சுகாதாரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரெய்லி அட்டைகளை பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன், செயிண்ட் லூயி காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி, சிறிய மலர் காதுகேளாதோர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.