பலருக்கு ஒரே பிளேடை பயன்படுத்தினால் ஹெபடைடிஸ் பரவும்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ நிகழ்ச்சியில் மெடிந்தியா மருத்துவமனையின் இரைப்பை – குடல் – கல்லீரல் பாதிப்பு குறித்த தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கிறார் டாக்டர் எம். அகமது அலி (இடமிருந்து 4-ஆவது). உடன் இடமிருந்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர், டாக்டர்கள் ஏ.ரத்தினசாமி, பி. ராமதிலகம், கே.ரகுராம், எஸ். திருஞானசம்பந்தம், மருத்துவமனையின் துணைத் தலைவர் டி.சி.சர்மிளா, ராஷ்மிகா சந்திரசேகர்..
ஒருவருக்கு உபயோகப்படுத்திய பிளேடை மற்றவருக்கு பயன்படுத்தினால் ஹெபடைடிஸ் நோய் பரவும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனை சார்பில், உலக ஹெபடைடிஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு “ஹெபடைடிஸ்’ (கல்லீரல் அழற்சி) நோய் மற்றும் ஜீரண மண்டல நோய்களுக்கான தீவிர சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஹெபடைடிஸ் நோய் குறித்து டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் கூறியது:
கல்லீரல் அழற்சி நோய் “ஹெபடைடிஸ் பி’ என்ற வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இந்த வைரûஸ கண்டுபிடித்த புளூம்பர்க் என்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானியின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி ஹெபடைடிஸ் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
கல்லீரல் அழற்சி என்பது ஒரு தொற்று நோயாகும். இது எய்ட்ûஸப் போல ரத்தம் தொடர்புடைய, தகாத உடல்உறவு, தாயிலிருந்து சேய்க்கு, கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவது, மற்றவருக்கு உபயோகப்படுத்திய ஊசிகளை பயன்படுத்தி பச்சை குத்துவது போன்றவற்றின் காரணமாகப் பரவுகிறது.
குறிப்பாக, திருவிழா காலங்களில் ஒருவருக்கு பயன்படுத்திய பிளேடையே பயன்படுத்தி பலருக்கு மொட்டை போடுவது, முடிதிருத்தும் கடைகளில் பயன்படுத்திய பிளேடினால் சவரம் செய்வதால் இந்நோய் வேகமாகப் பரவுகிறது.
நம் நாட்டில் இந்த நோயினால் ஆண்டுதோறும் 3 முதல் 5 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
பசியின்மை, உடல் சோர்வு, சிறுநீர் மற்றும் கண்கள் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், வாந்தி ஆகியவை ஹெபடைடிஸ் நோயின் அறிகுறிகளாகும். சிலருக்கு கல்லீரல் சுருக்க நோய் “சிரோசிஸ் ஆஃப் தி லிவர்’ வர வாய்ப்புள்ளது.
இதனால் வயிறு வீக்கம், ரத்த வாந்தி போன்ற விளைவுகள் ஏற்படும். மேலும் கல்லீரல் புற்று நோயும் ஏற்படலாம்.
கல்லீரல் தொடர்புடைய நோய்கள் வராமல் தடுக்க “ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை மூன்று முறை போட்டுக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சையே தீர்வாக அமையும் என்றார் டாக்டர் சந்திரசேகர்.
முன்னதாக நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை மையத்தினை விடியோ கான்ஃப்ரன்சிங் முறையில் டாக்டர்கள் கே.ரகுராம், எம்.அகமது அலி, பி.ராமதிலகம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.